Monday, 25 April 2016

பாதகத்தி

பாவமென்ன செஞ்சேன் - பாதகத்தி
பாவமென்ன செஞ்சேன்
பத்து மாசம் சுமந்தேன்  - உன்னை
பாரமுன்னு நினைச்சேனா

வயிற்றில் எட்டி உதைச்ச போதேல்லாம்
பெருமையா நினைச்சேன்
வறுமைக்கு பிறந்தாதால் - உன்னை
சாபமுன்னு நினைச்சேனா

பெண்ணாய் பிறந்ததால்
செலவுன்னு நினைச்சேனா
கள்ளிப்பால் தந்து
கருணை கொலை செஞ்சேனா

நடை வண்டி பழக வச்சேன்
நடக்கையில முத்தம் வச்சேன்
விதை நெல்லு வித்து தானே
பள்ளிக்கு அனுப்பி வச்சேன்

தாவணிப் பூ பருவம் வர
பருத்தி காட்டை அடகு வச்சி
பச்சை ஓலையில் குத்த வச்சி
ஊரெல்லாம் விருந்து வச்சேன்

கல்லூரி படிக்க வைக்க
கழனியெல்லாம் வித்து வைச்சேன்
பட்டம் வாங்குன; பட்டினமும் போன
வயித்தில் நெருப்போடு, வழியும் அனுப்பி வச்சேன்

பருத்தி நெஞ்சுக்குள்ள
காதல் நெருப்பு விழுந்துச்சா
பொழப்பு பார்த்த இடத்தில்
மனசை தொலைச்சியா

அப்பன் இல்லை
ஆண் மகனும் இல்லை
உன்னை ஆளாக்கி
மனுஷியா வளர்த்தேனே

ஆத்தா தடுப்பேன்னு - நீயே
உன் வாழ்க்கைய தேடி போனாயோ
ஊரே பழிக்குமடி
வீட்டுக்கு வந்து விடு

சாதி கொலை நடக்கும் - நம்
சமத்துவ பூமியில
சாதிக்க பிறந்தவளே - காதல்
சகதியில் விழுந்தாயோ

ஆத்தா வைய மாட்டேன்
மனசு கலங்காதே
அவுகள அழைச்சிக்கிட்டு
வீட்டுக்கு வா புள்ள

மிச்சமிருக்கும் - இந்த
மண்ணு குடிசையில - என்
உசுரு போகும் முன்னே
ஊருக்கு வா புள்ள

("பெத்து, வளர்த்து, அறிவூட்டி, ஆளாக்கி பிள்ளைகளுக்காக கனவு காணும் பெற்றோருக்கு இந்த கவிதை சமர்ப்பணம்")

- மன்சூர்














No comments:

Post a Comment